Friday, October 9, 2020

‘அப்பாலே போங்கள் ஜாதவ்’ – சிஎஸ்கேயியன்ஸ்

 


’கைக்கு எட்டியது கல்லாப் பெட்டிக்கு எட்டவில்லை’ என்பது போல ஆனது நேற்றைய சென்னை அணியின் தோல்வி.

மூன்று தொடர் தோல்விகளுக்குப் பின், பஞ்சாப் அணியுடனான போட்டியில் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கம் பேக் கொடுத்தது சென்னை அணி. வாட்சனும் டூப்ளஸிசும் பஞ்சாப் அணியைப் பஞ்சு பஞ்சாகப் பறக்க விட்டனர். ’சிங்கத்த டிவில பாத்துருப்ப, லயன் டேட்ஸ் விளம்பரத்துல பாத்துருப்ப, ஏன் அனுஷ்கா கூட டூயட் ஆடிக்கூட பாத்துருப்ப. வெறித்தனமா சேஸ் பண்ணி பாத்துருக்கீயா? பாத்துருக்கீயா?’ என்று மயில் வாகனத்தின் கோட்டையை அடித்துத் துவைத்தனர்.

”போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசயெல்லாம் சுட்டுத் தள்ளு, புதுசா இப்ப பொறந்தோம் என்று எண்ணிக்கொள்ளடா டேய்” என்று காட்டுக் குயில்களாக வெற்றிக் கொண்டாட்டத்தை பாடித்திருந்தார்கள் சென்னை ரசிகர்கள். ஆனால்  சென்னை அணியின் அடுத்த போட்டியிலேயே, ”பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா…டோய்..” என்று கேதர் ஜாதவ் எசப்பாட்டுப் பாடி, தோல்வியை அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார்.

கல்கத்தாவுடனான இந்தப் போட்டியில் சென்னை அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக வைக்கப்பட்டது. போகிற போக்கில் எடுக்கிற ரன்தான். ஓப்பனிங் வீரர்களும் கௌரவமான தொடக்கத்தைக் கொடுத்தார்கள். 9 விக்கெட்கள் கையில் இருக்க, 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொகுசு மோடில் இருந்தது சென்னை அணி. அடுத்ததாக தோனி இறங்கினார். ’படையப்பா ரொம்ப நேரம் எடுத்துக்காத சீக்கிரம் முடிச்சுட்டு வந்துரு’ என்று படையப்பா லட்சுமி மோடில் ரசிகர்களும் இருந்தனர். ஆனால் வாட்சன், தோனி, சாம் குரன் என்று வரிசையாக பிக் பாஸ் பார்க்க நடையைக் கட்டிக் கிளம்பினார்கள்.

’தம்பி வா.. ஃபினிஷ்ங் ஷாட் அடிக்கவா’ என்று பிராவோவை தோனி அழைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அஞ்சாநெஞ்சர் பிராவோவின் வருகைக்காக வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்தனர். ஆனால் ஏரோபிளைன் சைஸ் ஏமாற்றமே வந்து அவர்கள் தலையில் தரையிறங்கியது.

’கடைசியா தான் வந்தார் விநாயக் மகாதேவ்..’ என்பது போல கேதர் ஜாதவ் கையில் பேட்டுடன் களத்தில் வந்தார். ப்ளேயிங் லெவனில் மட்டுமல்ல துபாயிலேயே நீங்கள் இருக்கக்கூடாது ஜாதவ் என்று சென்னை ரசிகர் அன்புக் கட்டளையிடும் அளவிற்கு இந்த ஐபிஎல்-லில் அவரின் பேட்டிங் இருந்தது.

’செவ்வல தாவுடா தாவு’ என்று ரசிகர்கள் ஊக்கம் கொடுத்தாலும், ‘எங்க தாவுறது நானே தவந்துக்கிட்டிருக்கேன்’ என்று பேட்டிங் சொதப்பிக்கொண்டிருந்தது சென்னை அணி.

இதில் ஜாதவின் அலப்பறைகளைப் பார்க்கப் பார்க்கதான் ரசிகர்கள் வெறியானார்கள். கடைசி நேரத்தில் புது பேட் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டார். மேலும் சுற்றிலும் எத்தனை வீரர்கள், எந்தெந்த ஆங்கிள்களில் நிற்கிறார்கள், காலை என்ன சாப்பிட்டார்கள், பிக் பாஸில் யாருடைய ஆர்மி சேர்ந்தவர் என்பது வரை கைகளாலேயே அளந்துகொண்டிருந்தார். ’இருக்கு.. இன்னைக்கி சம்பவம் இருக்கு’ என்று ரசிகர்களை நம்ப வைத்தார். ஆனால் மொத்தம் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார்.

நாலு ஓவரில் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த அணி, அடுத்த மூணு ஓவர்களுக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி ஓவருக்கு 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. கடைசி 8 பந்துகளில் மொத்தமே ஒரு ரன்தான் எடுத்து சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

ஜாதவை மட்டும் இதில் குற்றம் சொல்ல முடியாது. மிடில் ஆர்டர் முழுதுமே சொதப்பியது. தோனி உட்பட யாரும் ரன் ரேட்டை மெயின்டெயின் பண்ணவில்லை. அடித்து ஆடக்கூடியவர்களான குரானும், ஜடேஜாவும் சேர்ந்து டொக்கு வைத்தனர்.

எந்தக் காரணத்திற்காகத் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் ஜாதவை ப்ளேயிங் லெவனில் தோனி எடுக்கிறார். அதிலும் இக்கட்டான சூழலில் பிராவோவிற்குப் பதிலாக ஏன் இவரை இறக்கினார் என்பது தோனிக்கே வெளிச்சம்.

ஆனாலும் ஜாதவ் மேல் உள்ள கோபம் ரசிகர்களுக்குக் குறையவே இல்லை. ‘அப்பாலே போங்கள் ஜாதவ்’ என்று ரசிகர்கள் அவரைக் கண்டாலே ஓடுகிறார்கள். ஆறு போட்டிகளில் நாலில் தோல்வியைத் தழுவியது இக்கட்டான கட்டத்திற்குச் சென்னையை இழுத்துச் சென்றிருக்கிறது.

Tuesday, October 6, 2020

பிக்பாஸில் மட்டுமா சாதி? துப்புச்சுக்கு துப்புச்சுக்கு பார்வை

 


நான் சென்னை வந்த புதிதில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் தங்கியிருந்தேன். அதே தெருவில் என் சொந்த ஊரை சேர்ந்த 70 வயதை கடந்த ஒரு பெரியவரும் இருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து குடியேறியவர். பேச்சு வழக்கை வைத்து நான் எந்த ஊரை சேர்ந்தவன் என்று தெரிந்துக்கொண்டார். பின் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஊரை பற்றி, குடும்பத்தை பற்றி பேச்சுக்கொடுத்து, நான் என்ன சாதி என்று போட்டு வாங்க பார்ப்பார்.

“தம்பி நீங்க மேலூர் பக்கட்டெல்லாம் போறதுண்டா? நமக்கு கோயில் அங்கிட்டு தான் வெள்ளரிப்பட்டி. அத்த யாரோ இருக்கதோ சொன்னீங்களோ முன்ன (போட்டு வாங்குறது)”

“இல்ல தாத்தா. எங்க அத்த செக்கானம்.”

“அட செக்கானமா அப்டி சொல்லுங்க. எங்க மதினி செக்கானம் தான். அங்கிட்டு எங்க உங்க அத்த?”

“அதாவது தாத்தா. செக்கானத்துலருந்து உசில போற ரோட்ல எட்டு கிலோ மீட்டர்ல லெப்ட் எடுத்தா டோலக்பூர் வெளக்கு வரும். அங்கெருந்து 2 கிலோ மீட்டர் தான். ஜெஸ்ட் வாக்கபில் டிஸ்டன்ஸ்.”

“டோலக்பூரா ??? அதுல யாரு வீடு?”

“டோலக்பூர்ல சோட்டா பீம் ஐயா வீடு எதுனு கேட்டா ஜட்டி போடாம சுட்டி டிவி பாக்குற கொழந்த கூட சொல்லும். மேக்கால விக்ரபாண்டி வரைக்கும் நெல கெடக்கும். பீம் மாமா பையனுக்கு தான் எங்க டோரா அத்தைய கட்டி கொடுத்துருக்கோம். கொரோனா டைம்ங்குறதால எங்கயும் இப்ப பயணங்கள் போறதில்ல டோரா அத்த. அந்த பக்கட்டு போனிங்கனா கண்டிப்பா பீம் மாமாவுக்கு கொஞ்சம் லட்டு வாங்கி கொடுத்துட்டு போங்க.”

கொஞ்சம் நேரம் திருதிரு என்று முழித்துக்கொண்டிருந்தார்.

ஒருவனின் சாதியை தெரிந்துக்கொள்வதற்கான தேவை, அவன் ’இன்னார் மகன் இன்னாராக’ இருந்தால் அவனுக்கு கிடைக்கும் நன்மைகள், அவன் வேறொரு ’இன்னார் மகன் இன்னாராக’ இருந்தால் அவனுக்கு கிடைக்கும் தீமைகள் போன்ற கேள்விகள் எல்லாவற்றையும் என்னை போன்ற ஏதோவொரு ‘இன்னார் மகன் இன்னார்’கள் மண்டையில் ஏற்றிக்குழப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேநேரம் ஒரு சராசரி மனிதன் ஒருவனால், மற்றொருவனின் சாதியை அறிந்துக்கொள்ள கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கிறது. பாவம். அதிலும் என்னை போன்ற ஏழரைகளிடம் சிக்குபவர்கள், ஏடாகூடமான பதில்களால் குழம்பி போய் முடிக்கொட்டி, ஏர்வாமார்டின் ஹேர் ஆயில் வாங்க வேண்டி இருக்கிறது.

இன்று ஒரு வீடியோ பார்த்தேன். பல லட்சம் பேர் பார்க்கும் பிக்பாஸ் ஒரு டிவி நிகழ்ச்சியில் அதன் பங்கேற்பாளர் சர்வசாதாரணமாக “உங்க சாதி என்ன?” என்று கேட்கிறார். அதற்கு அந்த நபரும் தன் சாதியை வெளிப்படையாக சொல்கிறார்.

இதை பார்த்த என் நண்பர் ”மாடர்ன் ஜென்ரேஷன்ல எப்டி இப்டி வெளிப்படையா சாதிய கேக்குறாங்க?” என்று அலுத்துக்கொண்டார். நவீனமும் தொழில் நுட்பமும் அவ்வளவு எளிதில் சாதி அமைப்பை விழுங்கி விடுமா என்ன?

கால மாற்றத்தில் நிகழ்கிற அத்தனை மாற்றங்களையும் அந்த அமைப்பு உண்டு செரித்துக் கொள்ளும். சாதி என்றில்லை, மதம், மொழி எல்லாமுமே எல்லா மாற்றங்களையும் உள்ளிழுத்து, தன்னை பலப்படுத்திக் கொள்ளும். சினிமா, இலக்கியம், தேர்தல் அமைப்பு என்று எல்லாவற்றையும் தனது ஆயுதமாக்கிக்கொள்ளும், உணவாக்கிக்கொள்ளும். அப்போது தான் அது வாழும். இல்லை என்றால் அது மற்றொன்றால் விழுங்கப்பட்டுவிடும். அது தான் சமூகத்தின் நியதி.

சாதி போன்ற பழமையான அமைப்பு இதற்கு முன் எத்தனை வகையான கலாச்சார, பண்பாட்டு மாறுதல்களை கண்டிருக்கும். அவை எல்லாவற்றையும் நெகிழ்வு தன்மையாக்கி உள்ளிழுத்துக்கொண்டு, தானும் ஒரு நெகிழ்வு தன்மையுள்ள ஒன்றாக மாறியிருக்கும். ஆனால் இரண்டாவதாக சொன்ன நெகிழ்வுத் தன்மை என்பது, தன்னை பலப்படுத்திக்கொள்ள எடுக்கும் அவதாரம். இதன் சமீபத்திய உதாரணம் ஒன்றை பார்ப்போமே.

திருமண மேட்ரிமோனிகளை எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும் மெத்தப்படித்தவர்களாலும், நாகரீகத்தில் மேல்தட்டில் இருப்பவர்களாலும் நுகரப்படும் திருமணத்திற்கான ஒரு நவீன தளம் (திருமண முறையும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை இழுத்துக் கொண்டது).

நவீன தளம் என்பதால் அங்கு சாதிகள் இல்லாமல் இல்லை. மாறாக சாதிக்கு ஒன்று உள்ளது. ‘இந்த சாதிகள் எங்களுடைய  தளத்தில் பதிவு செய்துக்கொண்டால், இந்த சாதியிலேயே வரன் கிடைக்கும்’ என்று வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகிறது. அது சமூகத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.

அந்த விளம்பரங்களில் வருபவர்கள் எல்லாருமே நவயுக இளைஞர்களும், இளைஞிகளும் தான். எல்லா நவீன தொழில்நுட்பத்தையும் அறிந்து, அவற்றின் உதவியாலேயே தன் ஒவ்வொரு நாளையும் வாழ்பவர்கள். அந்தத் தளத்தின் மூலம் தனக்கு கிடைத்த சுயசாதி துணை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஏன் இந்த ’கல்வி’ பெற்ற ’தொழிற்நுட்ப’ தலைமுறையால் சாதியை தூக்கி எறிய முடியவில்லை?

தொழில்நுட்பம் மட்டுமல்ல கல்வி, தேர்தல் அதிகாரம் போன்றவற்றை வெறுமனே சமுதாயத்தின் மேல் படரவிடுவதால் எவ்வித சமுதாய முன்னகர்வும் நிகழாது. மாறாக பழமைகள் மேற்கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தான் உதவும். அதை ஆயுதமாக்க வேண்டும். நமக்கு ஏற்றார் போல அதை வளைத்து, நாமும் வளைந்து அதை நமக்கு கருவியாக்கிக்கொள்ள வேண்டும். தரையில் இறங்கி உழ வேண்டும். காற்றில் கயிறு திரிக்கக்கூடாது. ஆண்டனிக்களை அடக்க பாட்ஷா பாய்களாக தான் மாற வேண்டும்.

இவை எல்லாம் நடக்கும் வரை பிக்பாஸ் வீடுகளில் மட்டுமல்ல, பிட்சா ஷாப்புகளில் கூட இந்த ’கேள்விகள்’ கள்ளிப்பூக்களாக வந்துக்கொண்டே தான் இருக்கும். நாம் தினமும் பறிக்க முடியாது. அதனால் சீக்கிரத்தில் கள்ளிச்செடியையே தூரோடு வெட்டி எறிந்து விடுவோம்.

சரிடா அதுக்கு இத அப்டியே விட்றலாமானு கேட்டா.. அதெப்புடி விட முடியும். இந்த ‘குறும்படத்தின்’ மூலமே நம் வேலை தொடங்குவோம். ஏன்னா யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. ‘காமன்மேன்’ இஸ் வாட்சிங். துப்புச்சுக்கு துப்புச்சுக்கு..

Monday, October 5, 2020

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

 


ற்போது தமிழக மக்களின் பொழுது போக்கிற்குப் பஞ்சமே இல்லை. ஐபிஎல் 13.0, பிக்பாஸ் 4.0 என வரிசை கட்டி நிற்கிறது. இதில் இந்த வாரம் புதுவரவாக வந்திருக்கிறது தர்மயுத்தம் 2.0.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியலிலும், அதிமுக தலைமையிலும் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இபிஎஸ் ஆர்மியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓபிஎஸ் ஆர்மியும் களம் எட்டில் மோதிக்கொண்டன.

பொதுக்குழுக் கூட்டங்களிலும், ஈசிஆர் ரோடு மன்னார்குடிகாரர்களின் பீச் ஹவுஸுகளிலும் இவை ‘நாகபதனியா? நாகப்பதனியா?’ என்று யுத்தம் புரிந்தது. என்னதான் ஓபிஎஸ் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கி மெரினா ஸ்பெஷல் மிட் நைட் யோகா, தியான வகுப்புகள் நடத்தினாலும் பவுலிங்கில் சொதப்ப, ‘பேட்டைக்காரன் பார்டியின்’ கருப்புச் சேவலே வெற்றிபெற்றது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் நாள், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரா ‘ஒருவர்’ மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன்னர் அப்பாக வந்த ஓபிஎஸ் அணிக்கு, துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

என்னதான் உள்ளுக்குள் அடிபிடிகள் இருந்தாலும், ‘இனமெனப் பிரிந்தது போதும், மதமெனப் பிரிந்தது போதும். மனிதம் ஒன்றே தீர்வாகும்’ என்று இருவரும் கட்சிக்காகவும் தமிழக மக்களுக்காகவும் உழைக்கிறார்கள் என்று அதிமுக கட்சியினர் பெருமைப்பட்டுக்கொள்ளாத நாட்கள் இல்லை. “தேவா பொழச்சுப்பான்.” “டாக்டர் சொன்னாரா?” “இல்ல தேவாவே சொன்னார்” என்ற தளபதி படத்தின் காட்சி மக்களுக்கு நினைவுக்கு வருவது போல, ”இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?” ”நம்புனாதான் சோறுனு சொன்னாங்க” என்ற கலகலப்பு படத்தின் காட்சியும் கட்சியினருக்கு நினைவில் வராமல் இல்லை.

இதில் உச்சபட்சமாக, அக்கட்சியினர் ‘தமிழகத்தில் சேவும் ஃபிடலும்’ என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை மார்பிங் செய்து போஸ்டர் அடித்தனர். இதன் தாக்கம் தமிழகத்திலிருந்து பறந்து போய் கியூபாவின் சக்கரை ஆலைகள் வரை எதிரொலித்தது.

இப்படி ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா… லோலலோ…’ என்று விக்ரமன் படமாக ஓடிக்கொண்டிருந்த கட்சியில் இப்போது புதிதாக ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

கடந்த செப் 28-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு வந்த கட்சியினர் இரு பிரிவுகளாக வந்தனர். நாகபத.. ஈபிஎஸ் அணியினர் ஈபிஎஸ் முகமூடியுடனும், ஓபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் முகமூடியுடனும் வந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ‘அப்ப அதான ஜெஸ்ஸி?’ என்று மற்ற கட்சியினர் வெளிப்படையாகவே, அதிமுகவினரிடம் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

நண்டு ஆம்லேட்டில் மேக்கொண்டு நாலு கரண்டி பெப்பரைத் தூவி விட்டது போல காரசாரமாக இருந்திருக்கிறது முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே நடந்த அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடும் விவாதம்.

அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “எனக்கு பதவி மீது ஆசையில்லை. நான் யாரிடமும் சென்று முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லை. அம்மாவின் ஆட்சியைக் காப்பாற்றவே என்னை முதலமைச்சராகத் தேர்வு செய்தார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியைத் திறம்படவே நடத்தினேன். இந்தக் கொரோனா காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாக பிரதமரே பாராட்டியுள்ளார்” என்று பேசியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சர்ச்சையைத் தொடங்கியதே உங்கள் தரப்புதான். முதலில் ராஜேந்திர பாலாஜியை வைத்துப் பேச வைத்தீர்கள். பின்னர் அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கச் சொன்னீர்கள். பின்னர் மீண்டும் சேர்க்கச் சொன்னீர்கள். நீங்கள் சொன்னதை எல்லாம் நான் செய்து வருகிறேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான் திருப்தியாக இல்லை” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

“கட்சி அணிகள் மீண்டும் இணையும் போது, இந்த நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே எடப்பாடி முதலமைச்சராகவும் அடுத்து வரும் தேர்தலில் என்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவேன் என்றும் சொன்னீர்கள். அதன் அடிப்படையில்தான் கட்சியில் இணைந்தேன். பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து துணை முதலமைச்சர் மற்றும் அதன் இலாக்காக்களைப் பெற்றுக்கொண்டேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னது ஓபிஎஸ் ஆர்மியைக் கண்கலங்க வைத்துவிட்டது.

இத்தொடர் விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை மூன்று முறை முதலமைச்சராக்கியது ஜெயலலிதாதான் எனக் கூறியுள்ளார். அதனை மறுத்துப் பேசிய எடப்பாடி “நம் இருவரையும் முதலமைச்சராக்கியது சசிகலாதான்” என்று பதிலளித்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர், இக்கூட்டத்திலேயே கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் எனப் பேசியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, “வரும் அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும்” என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

யுத்தத்திற்கான பந்தகால் நடப்பட்டிருக்கும் சூழலில், இன்று காலை ஓ.பன்னீர் செல்வம் செய்திருக்கும் ட்வீட், மேற்கொண்டு பந்தலில் சீரியல் செட் மாட்டிவிட்டு, யுத்த ஏற்பாடுகளைக் களைகட்ட வைத்திருக்கிறது.

ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

`தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!’

நாளை மறுநாள் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நாள் என்பதால், இரு ஆர்மிகளும் தங்கள் ரத கஜ துரக பதாதிகளைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன. ஓபிஎஸ் ஆர்மி ‘கலையலங்காரம் மறுபடியும் வீட்ட ஆஸ்பிட்டலா மாத்துங்கடா’ மோடுக்கு வந்து விட்டதால், பொதுமக்கள் அன்று மாலைக்கு மேல், மெரினா கடற்கரை பக்கம் செல்வதைத் தவிர்க்கவும். முக்கியமாகத் தியானப்பிரியர்கள் தவிர்க்கவும்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே !

Saturday, October 3, 2020

ஏந்திரி அஞ்சலி ஏந்திரி – சென்னை ரசிகர்கள் கவலை




 ’தூதுவன் வருவான் மாரி பொழியும்’ என்று அஞ்சாநெஞ்சர் பிராவோ மற்றும் ராயுடு வருகைக்காக காத்துக்கிடந்த சென்னை ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது ஐதராபாத்துடனான நேற்றைய போட்டி.

முரளி விஜய் நேற்றைய ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் இருந்ததே சென்னையின் பெரிய வெற்றி என்று பலரால் பாராட்டப்பட்டது. ஆனாலும் பேட்டிங்கை பார்க்கும் போதுதான் தெரிந்தது ‘முரளி விஜய் சென்னை அணியில் இல்லை. ஒட்டு மொத்த சென்னை அணி தான் முரளி விஜய்க்குள் இத்தனை நாள் இருந்திருக்கிறது’ என்று. இந்த தொடர் சரிவுக்கு காரணத்தை தேடினால், அந்தப் பட்டியல் வேதாளத்தில் தல குதிக்கும் பாதாளம் போல போய்க்கொண்டே இருக்கிறது.

சென்னை அணியை பொறுத்த வரைக்கு சீனியர் வீரர்கள் பஞ்சம் இல்லை. ஆனால் ப்ராப்ளமே அதுதான். பெரும்பான்மையான வீரர்கள் 80-ஸ் கிட்ஸாகவோ, ’மூத்த’ 90-ஸ் கிட்ஸாகவோ, 33 வயதை கடந்தோ, மெதுவாக நடந்தோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அடித்து ஆட 2k கிட்ஸ்கள் போதுமான அளவு இல்லை.

சாம் குரான் முகம் நம்ம துருவ் விக்ரமை ஞாபகப்படுத்துகிறர். ’நம்ம சீயான் பையன் துருவ் விக்ரம் செய்ற காரியத்த பாருங்க’ என்று சாம் குரான் பேட்டிங் வீடியோக்களை யூட்யூப் சானல்கள் போடத் தொடங்கி விட்டன. துருவ் விக்ரமுக்குக் கூட அடுத்து வாய்ப்புகள் கிடைத்து விடும் போல, ஆனால் ஓப்பனிங் இறங்க குரானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

22 வயது சுட்டி பையன் இந்த ஐபிஎல் போட்டிகளில் மொத்த 19 பந்துகள் மட்டுமே சந்தித்துள்ளார். அதில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 51 ரன்கள் குவித்து, ஸ்ட்ரைக் ரேட்டில் பங்குனி வெயில் போல உச்சத்தில் அடித்துக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் ரூம் ரேட் பிரச்சனையில் இருந்த சென்னை அணிக்கு, ஸ்ட்ரைக் ரேட் ஒரு பொருட்டாக தெரியவில்லை.

தோனி, ரெய்னா, பிராவோ, டூப்ளஸிஸ், வாட்சன், முரளி விஜய், ராயுடு, ஹர்பஜன், ஜடேஜா, கேதர் ஜாதவ், இம்ரான் என எல்லா வீரர்களும் ஐபிஎல்லுக்கு அடிக்கல் நாட்டிய காலத்தில் இருந்து களத்தில் இருக்கிறவர்கள். ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி போய், லலிதா ஜுவல்லர்ஸ் ஓனரே விளம்பரத்தில் நடிக்க வந்துவிட்ட காலத்திலும் அணி இவர்களையே நம்பியிருக்கிறது.

இவர்களும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற்று விட்டால், மொத்த சென்னை அணியும் காலியாகிவிடும். அதன் பின் அதை ப்ளாட் போட்டு, ‘ஒரகடம் பக்கத்துல காத்தோட்டமான..’ என்று அப்பாஸை வைத்து விளம்பரம் செய்து விற்பனைக்கு வரலாம்.

மற்ற அணிகள் தைரியமாக இளசுகளை களம் இறக்குகின்றன. அந்த தைரியமே அவர்கள் அடித்து நொறுக்க நம்பிக்கை அளிக்கிறது. தில்லி அணியை பொறுத்த வரை ப்ரித்வி ஷா (20), டேனியல் சாம்ஸ் (27), விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் (22) போன்றவர்கள் உள்ளனர்.

கொல்கத்தாவை பார்த்தால் ஷிவம் மவி (21), கமலேஷ் நாகர்கொட்டி (20), ராஜஸ்தான் அணியில் சூப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் (25), ஆல்-இன்-ஆல் அழகு ராஜாவாக ராகுல் திவாடியா (27) உள்ளார்கள். நேற்றைய போட்டியில் சென்னை அணியின் ராயுடுவை அவுட் ஆக்கியது, தமிழகத்தை சேர்ந்த நடராஜன் (27).

அதேநேரம் சீனியர் வீரர்களை முற்றாக துடைத்து எறிய முடியாது. அவர்கள் வழிகாட்டலும், அனுபவமும் அணிக்கு எப்போதும் தேவை. வயது ஒரு தடையே இல்லை. 40 வயதை நெருங்கும் போதும் சச்சின் சதங்களை அடித்துக் கொண்டிருந்தார். ஷேன் வார்ன், மிஸ்பா 40-ஐ தாண்டியும் தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போதும் சூப்பர் ஹீரோ போல அடிக்கும் கிரிஸ் கெயிலுக்கு வயது 42.

அதற்காக இத்தனை சீனியர்களா? விசு படத்திலாவது ஒரு விசுதான் இருப்பார். படம் முழுதும் விசுக்களாக இருந்தால், விசுவே விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விடுவார். ‘பரிதாபகரமான நிலையில் இருக்கும் பாப்பம்பட்டி அணியில்’  தேவையான வீரர்களுக்கு  இடமும், தேவை இல்லாத வீரர்களுக்கு ஓய்வும் அவசியம். அதுவே ஒரு திறமையான அணியின் தலைமைக்கு அழகு. கேப்டன்சியை பற்றி தல தோனிக்கு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

சென்னை ரசிகர்களும் இன்னும் எத்தனை போட்டிகளுக்கு தான் ‘அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காற்று அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்’  என்ற கேஜிஎப் பட க்ளிப்பையே வாட்சப்பில் ட்ரைன் விட முடியும். அதற்குள் சிங்கம்-4 படமே ப்ரைமில் வந்துவிடும் போல.

‘ஏந்திரி அஞ்சலி ஏந்திரி’ என்று சென்னை ரசிகர்கள் கவலை கொள்ள தொடங்கி விட்டனர். ‘வரணும்.. பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்பது தான் அவர்களின் வேண்டுதல்.

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

  கொஞ்சம்   யோசித்துப்   பாருங்கள் .. 2014,  டிசம்பர்  3,  இரவு   சுமார்   எட்டு   மணி   இருக்கும் “ மூக்கின்   மேலே மூக்குத்தி   போலே மச்சம...