ஷியாம் புஷ்கரன் சில உதாரணங்களை முன் வைக்கிறார். அதாவது குடும்ப அமைப்புகள் பற்றி. இரண்டு குடும்ப அமைப்புகளை வரைந்திருக்கிறார். முன்னது, ஒரு நன்கு கட்டியெழுப்பி, பின் சிதைந்து, ஒரு ஆணின் தலைமைக்கு ஏங்கி, பின்னதையடைந்து, அதன்கீழ் சிக்குண்டு கிடக்கும் ஒரு அடிமை குடும்பம். பின்னது, அதற்கு நேர்மாறானது. எவ்வித அமைப்பு கட்டுமானங்களுக்குள்ளும் சிக்காது, தான் தோன்றித்தனமாக பின்னப்பட்டு, வரையறையின்றி வாழும் முன்னதால் கைவிடப்பட்ட ஒரு சகோரதக்குடும்பம். இவ்விரண்டின் வாழ்வியலும் வெவ்வேறான போக்குகளை கொண்டிருந்தது. இன்று ஷியாம் மாத்ருபூமியில் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில்
ஷியாம் இப்படி சொல்லியிருந்தார். " நான் அதில் ரெண்டு குடும்பங்களை காட்டினேன். ஒன்று நல்ல குடும்பம். மற்றொன்று கெட்ட குடும்பம். அது எது எதுவென்று உங்கள் பார்வைக்கு தெரியும்." இங்கே தான் ஒரு பெருங்கேள்வியே தொடங்குகிறது. எது நல்ல குடும்பம்? இச்சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவ அமைப்பிலும், வாழ் முறையிலும் இயங்கும் குடும்பம் நல்ல குடும்பமா? அல்லது அதன் தோல்வியிலும், அதனால் கைவிடப்பட்டவர்களின் தேவையடிப்படையிலும், அத்தனிமனிதர்களால் அவர்களுக்கேற்றார் போல், பொது சமூக விதிகளின்றி உருவாக்கிக்கொள்ளும் குடும்ப அமைப்பு நல்லதா? பேட்டியில் ஷம்மியை பற்றி ஒரு கேள்வி வந்தது. ஷம்மி முன் சொன்ன குடும்பத்தின் அதிகாரத்தை கையிலெடுத்து, சர்வாதிக்காரம் செய்ய முயலும் ஒரு ஆண். குடும்ப தலைவன். ஷம்மியிடம் இன்னொன்றையும் காணலாம். அவன் அந்த அதிகார இருக்கைக்கு வர அவன் கையிலெடுக்கும் ஆயுதங்கள் பாசம். பொறுப்பு. கடமை. உரிமை. அதாவது இவ்வாயுதங்களை கொண்டே, அவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர முயல்கிறான். சரி அவனை பற்றிய கேள்விக்கு வருவோம். "ஷம்மி கதாப்பாத்திரத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்?" . இது கேள்வி.
"எங்கிருந்தும் எடுக்கவில்லை. எல்லா ஆண்களுக்குள்ளும் ஷம்மி இருக்கிறான். இன்னும் சொல்வதானால், என்னுள்ளிருந்தும் வந்தான்". இது பதில். அப்பதிலின் தொடர்ச்சி எங்கெங்கோ போகும். லெனின் சொன்னது நினைவுக்கு வருகிறது. " குடும்பம் ஒரு குட்டி அரசு". ஆகா அரசின் நோக்கம்? அதன் செயல்பாட்டின் பயன்கள் யாருக்கு சேர்கிறது? அதன் அதிகார அமைப்பு யாருக்கு இயங்கிறது? கேள்விகளுக்கு பஞ்சமில்லை. கீழேயுள்ள படம் பின்ன சொன்ன தான்தோன்றி குடும்பத்தாரின் படம்.

No comments:
Post a Comment