"நகரங்களின் உயர்ரக திரையரங்குகளில் ஜிப்பா போட்டுக்கொண்டு படம் பார்க்க வரும் தாடிக்காரர்கள் அல்ல எனது இலக்கு. என்னுடைய பார்வையாளன் மண்வெட்டியை கழுவி வீட்டில் வைத்துவிட்டு குளித்து ஒரு துவைத்த பழைய வேட்டியை கட்டிக்கொண்டு வந்து படம் பார்க்க அமரும் எளிய மனிதன். நான் போவது அவனை நோக்கித்தான்."
மிகவும் பழகிப்போன பழைய வசனம் இது. தமிழில் அடிதடி குத்துப்பாட்டுகளுடன் படம் எடுக்கும் திரைப்படக்காரர்களும் இதைத்தான் கூறுவார்கள். ஆனால் லோகி ஒருபோதும் சாமானியனின் சபலங்களை பயன்படுத்திக் கொண்டவரல்ல. சாமானியனின் சலிப்பையும் அக்கறையின்மையையும் நம்பி படம் எடுத்தவரல்ல. எளிய மக்களின் உள்ளே சுடர்விடும் நீதியுணர்வை நம்பி படம் எடுத்தவர் அவர். அவர்களுடைய சுயமரியாதையையும் மானுட உணர்வையும் தொட்டுப்பேச முடிந்தவர். அதனாலேயே அவர் அம்மக்களின் ப்ரியத்துக்குரியவராக இருந்தார். வாழ்நாள் முழுக்க லோகி "அமரத்தில்"தான் அமர்ந்திருந்தார்.
லோகி நினைவுகள் மதிப்பீடுகள்

No comments:
Post a Comment